சித்திரை நட்சத்திரம் 

சித்திரை நட்சத்திர தன்மைகள் 

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட இரண்டாவது நட்சத்திரம் சித்திரை. வெண்மையான தோற்றத்துடன் மிக அழகாக தோற்றமளிப்பதால் சௌம்ய தாரா என்றும் இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. சுபகாரியங்களுக்கேற்ற நட்சத்திரம் இது. இதன் முதல் இரண்டு பாதங்கள் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியிலும் அமைந்துள்ளன.

பொதுவான குணங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்வார்கள். பெற்றோர்கள் மீது மரியாதை கொண்டவர்கள். முன்கோபிகளாக இருப்பார்கள். அதே சமயம் உதவி என்று வருவோர்க்கு முடிந்த உதவிகளை செய்யும் நல்ல குணத்தையும் பெற்றிருப்பார்கள். தான் கொண்ட கொள்கையிலிருந்து மாற மாட்டார்கள்.

படித்திருந்தாலும் பார்க்கும் வேலைக்கும் படிப்புக்கும் சம்மந்தமே இருக்காது. வாழ்க்கைத் துணையை அதிகம் நேசிப்பவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் அவர்களை கேட்டுத்தான் முடிவு செய்வார்கள்.

எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள். பிள்ளைகளிடம் அன்பும், கண்டிப்பும் காட்டுவார்கள். கற்பனைத் திறன் பெற்றவர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். செல்வாக்குமிக்கவர்களாக இருப்பார்கள்.

நல்ல குடும்ப வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள். சாதுர்யமாகப பேசி காரியத்தை சாதித்துவிடுவார்கள். புதுப்புது ஆடை ஆபரணங்களை அணிவதில் விருப்பம் கொள்வார்கள். வாழ்க்கையில் நடந்த பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து நினைத்து கவலைப்படுவார்கள்.

சித்திரை முதல் பாதம்

சூரியன் இதன் அதிபதியாவார். படித்த படிப்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேலையைச் செய்வார்கள். நண்பர்கள் வட்டம் குறைவு தான். எதையும் சாதுர்யமாக பேசி சாதித்துவிடுவார்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள். சுயகௌரவத்தை விட்டுத்தர மாட்டார்கள். பிடிவாத குணத்தைக் கொண்டிருந்தாலும் விட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக சிந்தித்து செயலாற்றுவார்கள். தாயை நேசிப்பவர்கள். எதிலும் புதுமையை விரும்புகிறவர்கள்.

சித்திரை இரண்டாம் பாதம்

புதனை அதிபதியாக கொண்ட பாதம் இது. இதில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆழமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். உடல் நலனின் அக்கறை காட்டுவார்கள். நகைச்சுவை உணர்வாளர்கள். எதையும் தெளிவாகவும், அறிப்பூர்வமாகவும் பேசுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள். தன்னால் இயன்ற காரியங்களை மட்டுமே செய்வார்கள். அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். ஒருவரை பார்த்த உடனேயே அவரைப் பற்றி யூகிக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். பல திறமைகள் இருந்தாலும் கூட வெளிக்காட்டுவதற்கு தயக்கம் காட்டுவார்கள்.

சித்திரை மூன்றாம் பாதம்

இதன் அதிபதி சுக்கிரன். எப்போதும் புதுமையாக சிந்திப்பவர்கள். செல்வாக்கு மிகுந்தவர்களாக இருப்பார்கள். எல்லோரும் சமம் என்ற பொதுவுடமைவாதியாக இருப்பார்கள். சமூக சேவைகளில் அக்கறை காட்டுவார்கள். கலைத்துறையில் புகழ் பெறுவார்கள். இரக்கக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் நேர்மை இருக்கும். ஒரு பணியை ஆரம்பிக்கும் முன் அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பின்னரே தொடங்குவார்கள். வாழ்க்கைத் துணைக்கு முழு சுதந்திரத்தையும் கொடுப்பார்கள். எந்த காரியமானாலும் அவரது கருத்தை அறிந்து செயல்படுவார்கள்.

சித்திரை நான்காம் பாதம்

நான்காம் பாதத்தை ஆட்சி செய்பவர் செவ்வாய் பகவான். வீரமும், விவேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். கல்வியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்களின் கஷ்டங்களை புரிந்து நடப்பார்கள். ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையை மதித்து நடப்பார்கள். வாழ்க்கையில் கீழ் நிலையில் இருந்தாலும் கடினமான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு முன்னேறுவார்கள்.

சித்திரை ராசிக்காரர்களுக்கான கோயில்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், குருவித்துறையில் அமைந்துள்ளது அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி. வியாழனே இங்கு வந்து தவம் செய்தார் என்பதால் குரு தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதோடு சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களது அனைத்து தோஷங்களும் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். திருமணத்தடை, புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வந்து சிறந்த பலனை அடைகின்றனர்.

Leave a Comment