துலாம் ராசி
துலாம் ராசி பொதுபலன்கள் :- துலாம் ராசி ராசி மண்டலத்தின் ஏழாவது ராசியாகும். இது வான வெளியில் 180′ முதல் 210′ டிகிரி வரை வியாபித்துள்ளது. இதன் வடிவம் தராசு ஆகும். காற்றுத் தத்துவத்தைக் கொண்ட ஆண், சர ராசியாகும். இதன் நிறம் வெண்மை. மனித உடல் உறுப்புகளில் தொப்புள், அடிவயிறு இவற்றை குறிக்கும். சுக்ரன் இதை ஆட்சி செய்கிறார். இங்கு மூலத் திரிகோணமும் பெறுகிறார். இதன் திசை மேற்கு. குணமும் குரூரத் தன்மை கொண்டது. இதில் சித்திரை நட்சத்திரம் 3,4 பாதங்களும், ஸ்வாதி நட்சத்திரம் 4 பாதங்களும், விசாகம் நட்சத்திரம் 1,2,3 பாதங்கள் கொண்டது. புருஷார்த்த தத்துவங்களில் காமம் எனும் இன்பத்தை குறிக்கும் ராசியாகும்.
துலாம் ராசி காரகத்துவங்கள்:- தராசு, சிறுநீரகம், கர்ப்பப்பை, கடை வீதி, ஆற்றுப்படுகை, வெள்ளி, ரத்தின வியாபாரம், கலைப்பொருட்கள், வாசனை திரவியம், அழகுக்கலை நிலையங்கள், சினிமாத் தொழில், கேளிக்கை விடுதி, பெரிய மனிதர்கள், வியாபார ஸ்தலங்கள், காற்றோட்டமான இடம், அதிகாலைப் பொழுது, பொய்பெயர், எதையும் உடனே புரிந்து கொள்ளுதல் முதலியன இதன் முக்கிய காரகத்துவங்கள் ஆகும்.
குணம்:- எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருப்பர். பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள். எல்லோரையும் மதித்து அவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பர். ஆசைக்கும், யதார்த்ததத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை அறிந்து வைத்திருப்பர். மற்றவர்களுடன் எளிதாக பழகுபவர். எல்லோரையும் எளிதில் புரிந்து கொள்வார். மற்றவர்கள் நினைப்பதை கண்டுபிடித்துவிடுவார். கெட்டதையும், நல்லதையும் தரம் பிரித்து அறிந்து கொள்ளுவார். தெய்வ பக்தி நிறைந்தவர்.
தோற்றம் :- கைகள் நீண்டு பரந்து காணப்படும். இவர்களது கை விரல்கள் மிருதுவாக இருக்கும். தலையில் மச்சம் இருக்கலாம்.
சொத்து :- வியாபாரத்தில் இவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். இவர்களது குணநலத்தின் காரணமாக எந்த காரியத்தை செய்தாலும் அதில் இவர்களுக்கு அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இவர்களது பணவரவு நன்றாக இருக்கும்.
வேலை :- துலாம் ராசிக்காரர்கள் எந்த பணியில் இருந்தாலும் அங்கு சிறப்பான பதவியில் இருப்பர். இவர்களது ஜாதகப்படியே இவர்களது சிறப்புத்தன்மை வெளிப்படும். வழக்கறிஞர், இசைக் கலைஞர், நடிப்புத் துறையில் பெயர் பெற வாய்ப்பு உண்டு. 5ல் இருந்து 20 வயது வரை இவர்களது வாழ்க்கை இன்பமாக இருக்கும். 21 முதல் 30 வரை பல துன்பங்கள் ஏற்படும்.
காதல் உறவு :- எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருப்பங்கள் :- துலாம் ராசிக்காரர்கள் வாகனம் ஓட்ட விரும்புவர். காடுகளுக்குச் செல்வது, கடிதம் எழுதுவது, விளையாட்டு ஆகியவை பிடிக்கும்.
பிசினஸ் :- துலாம் ராசிக்காரர்கள் சிறந்த வியாபாரியாக இருப்பர். இரும்பு, தங்கம் போன்ற வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். துணி தொடர்பான வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
நட்பு :- மிதுனம், கன்னி, மகரம், கும்ப ராசிக்காரர்களுடன் நட்பு கொள்ளலாம். மேஷ ராசிக்காரர்களுடன் விரோதம் ஏற்படும். கடகம் மற்றும் சிம்ம ராசிகள் ஒத்துவராது. துலாம் ராசிக்காரர்கள் துலாம் ராசிக்காரர்களுடன் நட்பு வைக்கலாம்.
இல்லற வாழ்க்கை :- தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம். கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புண்டு. துணைவியின் ஆலோசனையை கேட்டல் நலம். இரண்டு கல்யாணம் செய்யும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும்.
கல்வி :- துலாம் ராசிக்காரர்கள் இலக்கியம், சங்கீதம், இயக்கம், தயாரிப்பு, வழக்கறிஞர், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம்.
வீடு-குடும்பம் :- ராசிக்காரர்களின் தந்தைக்கு உடல்நிலை சரியிருக்காது. இவரது குழந்தைக்கும் பெரிய வியாதி ஏற்படும். இவரது குடும்ப வாழ்க்கை கடினமாக இருக்கும். சகோதர, சகோதரிகளுடன் சுமூகமான உறவு இருக்காது.
பலவீனம் :- மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பர். சுயமாக சிந்திக்கத் தெரியாது. இதனால் உடன் இருப்பவர்களை நம்பி ஏமாறும் நிலை ஏற்படும். அழகைக் கண்டு ஏமாறும் வாய்ப்பு உண்டு. பல ஆசைகளை வைத்துக் கொண்டு இருப்பர். எந்த ஒரு காரியத்தையும் சுயமாக செய்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர்.
பண்பியல் தொகுப்பு :- துலாம் ராசிக்காரர்கள் உயர் பதவியை அடையும் திறன் கொண்டவர்கள். வாழ்க்கைச் சக்கரம் மேலே சுழன்றாலும், கீழே சுழன்றாலும் அதன் போக்கை அனுபவித்து வாழ்பவர். எவ்வளவு பெரிய காரியத்தையும் எளிதாக செய்து முடித்து அசத்துபவராகவும் இருப்பர். சுக்ர திசை நடக்கும் போது பெரிய சாதனைகளையும் செய்யும் வாய்ப்பு உண்டு.
உடல் ஆரோக்கியம் :- நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள். ஆனால் சுக்ர மற்றும் மற்ற கிரகங்களின் இடங்களைப் பொறுத்து இவர்களின் உடல்நிலை அமையும். கண், சிறுநீரகம், வாய் போன்றவற்றில் நோய் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்:- துலாம் ராசிக்காரர்களுக்கு நீலம் அதிர்ஷ்ட நிறமாகும். நீல நிற பொருளை உடன் வைத்திருப்பது நல்லது.
அதிர்ஷ்ட கல்:- வைரம் இவர்களுக்கு அதிர்ஷ்டக் கல் ஆகும். வெள்ளியில் வைரத்தை பதித்து வியாழக்கிழமையில் அணியலாம்.
அதிர்ஷ்ட எண் :- துலாம் ராசிக்காரர்களுக்கு 6 அதிர்ஷ்ட எண்ணாகும். இதன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும். இது தவிர 4, 5, 8 எண்களும் சுபம். 1, 2 ஆகியவை அசுபம்.
அதிர்ஷ்ட நாள் :- இவர்களுக்கு சுக்ரனின் பார்வை இருப்பதால் வெள்ளிக்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்ட தினமாகும். புதன் மற்றும் சனிக்கிழமையும் கூட நற்பலன் தரும்.